தீவிர புயலாக வலுப்பெறும் அசானி! இந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை! ஜாக்கிரதையா இருங்கள் மக்களே


தீவிர புயலாக வலுப்பெறும் அசானி! இந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை! ஜாக்கிரதையா இருங்கள் மக்களே


கத்தரி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அந்தமான் கடல் பகுதியில் உருவான இந்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை "அசானி" புயலாக வலுப்பெற்றது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் மே 10 மாலை வட ஆந்திரா- ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு- வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் மே 10 முதல் 12 வரை வட தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 16 கிமீ வேகத்தில் நகரும் இந்த "அசானி" புயல், இப்போது விசாகப்பட்டினம் அருகே நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் என்பதால் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog