தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. ஜூலை 4 முதல் விண்ணப்பம்.. திருத்திய வழிகாட்டு முறைகள் வெளியீடு! 660206618


தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. ஜூலை 4 முதல் விண்ணப்பம்.. திருத்திய வழிகாட்டு முறைகள் வெளியீடு!


சென்னை: தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி எழுப்பியதோடு, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிகளுக்கு முரணாணது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக மட்டுமல்லாமல் ஆன்-லைன் வாயிலாக அனுப்பவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டார். அதில், திறன் உள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தியில்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog